Archives: ஏப்ரல் 2022

இராக்காலத்தின் ஊழியக்காரர்கள்

அந்த தீவிர சுகாதார மருத்துவமனையில் அதிகாலை 3 மணி. ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நாலாவது முறையாக அந்த கவலையுற்ற நோயாளி அழைப்பு மணியை அழுத்துகிறார். சற்றும் சலிப்பின்றி அந்த இரவுப்பணி செவிலியர் பதிலளிக்கிறார். உடனே மற்றொரு நோயாளி பராமரிப்பிற்காக அலறுகிறார். இதுவும் அச்செவிலியரை ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன், தன் மருத்துவமனையின் பகல்நேர பரபரப்பை தவிர்க்கவே இரவுப்பணியை கேட்டுப்பெற்றாள். அப்பொழுது தான் உண்மை உரைத்தது. இரவுப்பணியில் எப்போதுமே நோயாளிகளை தனியாக தூக்குதல், நகர்த்துதல் போன்ற கூடுதல் பணிகளிருந்தன. மேலும் நோயாளிகளின் நிலையை கூர்ந்து கவனித்து, அவசர நேரங்களில் தக்க மருத்துவரை அழைக்கவும் வேண்டியிருந்தது.

சக இரவுப்பணியாளர்களின் நெருங்கிய நட்பு ஆறுதலாயிருப்பினும், இந்த செவிலியர் போதுமான தூக்கமின்றி அவதிப்படுகிறார். தன் பணி மிக முக்கியமானது என்று கண்டு, தனக்காக ஜெபிக்குமாறு தன் சபையாரை அடிக்கடி கேட்பார். தேவனுக்கே மகிமை! அவர்கள் ஜெபங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவர் இப்படி துதிப்பது ஒரு இரவுப்பணியாளருக்கு நல்லது. நமக்கும் அது நல்லதே. சங்கீதக்காரன், “இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்கீதம் 134:1–2) என்றெழுதுகிறார்.

இந்த சங்கீதம், ஆலய காவலாளர்களாய் இரவும் பகலும் தேவனுடைய ஆலயத்தை பாதுகாக்கும் லேவியர்களின் முக்கியப்பணியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான உலகில், இந்த சங்கீதத்தை குறிப்பாக இரவுப்பணியாளர்களுக்கு பகிர்வது ஏற்றதாயிருக்கும், எனினும் நாம் அனைவரும் தேவனை இரவிலும் துதிக்கலாம். சங்கீதக்காரன், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (வச. 3) என்று ஆறதல்படுத்துகிறார்.

ஆவிக்குரிய நோய் கண்டறிதல்

என் மாமனாரின் கணையத்திலிருந்த புற்றுநோய் கட்டியை கிமோ சிகிச்சை கட்டுப்படுத்தியது, ஆனால் பலனளிக்கவில்லை. அக்கட்டி மீண்டும் வளர ஆரம்பிக்க, அவர் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தன் மருத்துவரிடம், “இந்த கிமோ சிகிச்சையை நான் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? ஒருவேளை மாற்று மருந்தோ, கதிர்வீச்சு சிகிச்சையை முயற்சிக்கலாமா?” எனக் கேட்டார்.

யூத ஜனங்களும் தங்கள் ஓட்டத்தில் வாழ்வா சாவா என்ற கேள்வியோடிருந்தனர். யுத்தத்தினாலும், பஞ்சத்தினாலும் சோர்ந்துபோன தேவ ஜனங்கள், தங்கள் பிரச்சனைக்கு காரணம் அதிகமான விக்கிரக ஆராதனையா, அல்லது விக்கிரக ஆராதனை போதுமானதாக இல்லையென்பதா என குழம்பினர். வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அதற்குப் பானபலிகளை அதிகம் வார்த்தால், அது தங்களைப் பாதுகாத்து, செழிப்படையச் செய்யும் என முடிவெடுத்தனர் (எரேமியா 44:17).

அவர்கள் மிகவும் தவறாக தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டதாக எரேமியா சொல்கிறார். விக்கிரகத்தை ஆராதிப்பதில் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்று அவர்கள் யோசித்தனர், ஆனால் அந்த விக்கிரகங்களை அவர்கள் வைத்திருந்தது தான் அவர்களின் தவறு. அவர்கள் தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்” (வச. 16) என்றார்கள். எரேமியா, “நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்” (வச. 23).

யூதாவைப் போலவே, நாமும் நம்மை சிக்கலில் அகப்படுத்திய பாவங்களை இருமடங்காக்கச் செய்ய தூண்டப்படலாம். உறவில் சிக்கலென்றால் நாம் தனித்து வாழ்கிறோம்; பணப்பிரச்சனை என்றாலும் நம் விருப்பப்படியே செலவுசெய்கிறோம். ஒதுக்கிவைக்கப்பட்டால் நாம் அதற்கு சமமாக மூர்க்கமடைகிறோம். ஆனால் நம் பிரச்சனைகளுக்கு காரணமாயிருந்த விக்கிரகங்கள் நம்மை காப்பாற்றப் போவதில்லை. நாம் இயேசுவிடம் மனந்திரும்பும்போது, அவரே நம் பிரச்சனைகளினூடே நம்மை தூக்கி சுமப்பார்.

விசுவாசத்தில் வளர்தல்

என் தோட்டக்கலை பயணத்தின் ஆரம்பத்தில், நான் காலமே எழுந்து என் காய்கறி தோட்டத்திற்கு விரைந்தோடி, ஏதாகிலும் புதிதாய் முளைத்துள்ளதா என பார்ப்பேன். ஒன்றுமிருக்காது! “விரைவான தோட்ட வளர்ச்சி” என்று இணையத்தில் தேடுகையில், செடியின் வாழ்நாளில் நாற்று பருவமே மிக முக்கியமென்று கற்றுக்கொண்டேன். இம்முறையை விரைவாக்க இயலாது என அறிந்தவளாக, விண்ணை நோக்கி மண்ணிலிருந்து முளைத்தெழும் தளிர்களின் வலிமையையும், பருவநிலை மாற்றத்திற்கேற்ற அவைகளின் எதிர்பாற்றலையும் வெகுவாய் ரசித்தேன். சில வாரங்கள் பொறுமையாய் காத்திருந்தபின், பச்சை மொட்டுக்கள் மண்ணிலிருந்து வெடித்தெழும்பி என்னை வரவேற்றன.

சிலவேளைகளில், நம் சுபாவத்தின் வளர்ச்சியானது காலப்போக்கிலும், போராட்டத்தின் மூலமாகவும் தான் உண்டாகுமென்று நாம் அறிவதில்லை. அதினால் நம் வாழ்வின் வெற்றிகளையும், அதினால் உண்டாகும் மகிழ்ச்சியையும் சுலபமாக கொண்டாடுகிறோம். யாக்கோபு, “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, ... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2-3) என்று நம்மை அறிவுறுத்துகிறார். ஆனால் சோதனைகளைக் குறித்து சந்தோஷப்பட என்ன இருக்கிறது?

சிலசமயம், தேவன் நம்மை சவால்களினூடும், கஷ்டங்களினூடும் செல்ல அனுமதிக்கிறார். அதினால் நாம் அவருடைய அழைப்பிற்கேற்றபடி வனையப்பட முடியும். “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” (வச. 4) நம் வாழ்வின் சோதனைகளிலிருந்து நாம் வெளியே வர தேவன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இயேசுவில் உறுதியாய் நாம் நிலைத்திருக்கையில், எத்தகைய சவாலிலும் நீடியபொறுமையாய், வலிமையாக வளர்ந்து முடிவில் ஆவிக்குரிய கனியானது நம் வாழ்வில் மலரக் காண்போம் (கலாத்தியர் 5:22–23). ஒவ்வொரு நாளும் நாம் உண்மையாக செழித்தோங்க தேவையான ஊட்டச்சத்தை, அவருடைய ஞானமே நமக்குக் கொடுக்கிறது (யோவான் 15:5).

மீண்டும் பாடுங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபல ரீஜண்ட் தேனுண்ணி பறவையினம் ஆபத்திலுள்ளது. அதின் இன்னிசைக்குரல் குருகுகிறது. முன்னர் அதிகளவில் இருந்தவை, தற்போது வெறும் முன்னூறு பறவைகளே மீந்துள்ளனவாம். கற்றுத்தர கூடியவைகள் சிலமட்டுமே உள்ள நிலையில், ஆண்பறவைகள் தங்கள் தனித்துவமான பாடலை மறந்து, தங்கள் துணையை ஈர்க்க தவறுகின்றன.

அதிர்ஷ்டவசமாக சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் இந்த தேனுண்ணிகளை மீட்க ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அவைகளுக்காக தாங்கள் பாடுவதே அந்தத் திட்டம். அதாவது, பிற தேனுண்ணிகள் பாடுவதை ஒலிப்பதிவு செய்து அவைகளைக் கேட்கச்செய்தால், தங்கள் ஆழ்மனதில் உள்ள பாடலை மீண்டும் கற்கின்றன. ஆண் பறவைகள் இசைமெட்டோடு பாடுகையில் தங்கள் ஜோடிகளை மீண்டும் ஈர்க்கும். அவ்வாறு செய்வதின் மூலம் இனவிருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
தீர்க்கதரிசி செப்பனியா, உபத்திரவத்திலிருந்த ஜனங்களிடம் பேசுகிறார். தங்களுக்குள் மிகவும் சீர்கெட்டுபோனதால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதாக உரைக்கிறார் (செப்பனியா 3:1–8). பிற்காலத்தில், கைப்பற்றப்பட்டு சிறையிருப்புக்குள் செல்வதின் மூலம் இது நிறைவேறுகையில், ஜனங்களும் தங்கள் பாடலை மறந்தனர் (சங்கீதம் 137:4). ஆனால் செப்பனியா, நியாயத்தீர்ப்புக்கு பின்னான காலகட்டத்தை முன்னமே பார்க்கிறார். நாடுகடத்தப்பட்ட இந்த ஜனங்களிடம் தேவன் வந்து, அவர்கள் பாவங்களை மன்னித்து, அவர்களுக்காக பாடுகிறார், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதின் முடிவாக, ஜனங்களின் ஆத்மார்த்தமான பாடல் மீட்டெடுக்கப்படும் (வச. 14).

நம்முடைய கீழ்படியாமையாலோ, வாழ்வின் சோதனைகளாலோ நாமும் நம் மனதிற்கினிய பாடலை இழந்திருக்கலாம். ஆனால் நமக்காக மன்னிப்பின் பாடல்களையும், அன்பின் பாடல்களையும் ஒரு குரல் பாடுகிறது. நாமும் அவருடைய இசையை கவனித்துக்கேட்டு அவரோடு சேர்ந்து பாடுவோமாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தயவை தொடரச்செய்தல்

தயவா அல்லது பழிவாங்கலா? லிட்டில் லீக் பிராந்திய சாம்பியன்ஷிப் பேஸ்பால் விளையாட்டின்போது ஏசாயா தன்னுடைய தலையில் பலத்த காயம் அடைந்தான். அவர் தன் தலையை பிடித்துக்கொண்டு தரையில் விழுந்தான். அதிர்ஷ்டவசமாக, அவரது ஹெல்மெட் அவனை கடுமையான காயத்திலிருந்து பாதுகாத்தது. ஆட்டம் மீண்டும் தொடங்கியதும், ஏசாயா தனது தற்செயலான பிழையால் பந்து எறிபவர் பாதிக்கப்பட்டதை உணர்ந்தான். அந்த நேரத்தில், ஏசாயா மிகவும் அசாதாரணமான ஒன்றைச் செய்தான். அந்த வீடியோ மிகவும் பிரபலமானது. அவன் பந்து எறியும் நபரிடம் சென்று, அவரை ஆறுதல்படுத்தும் வகையில் கட்டிப்பிடித்து, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். 

பழைய ஏற்பாட்டில், ஏசா தனது இரட்டை சகோதரன் யாக்கோபை பழிவாங்கும் நீண்டகால திட்டங்களை கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாக இருந்தாலும், இதேபோன்ற ஓர் செய்கையை செய்வதை நாம் காணமுடியும். ஊரை விட்டுசென்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு யாக்கோபு வீடு திரும்பியதும், அவன் தனக்கு அநீதி இழைத்த வழிகளுக்குப் பழிவாங்குவதற்குப் பதிலாக ஏசா தயவையும் மன்னிப்பையும் தெரிந்தெடுத்தான். ஏசா யாக்கோபைக் கண்டதும், “எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்” (ஆதியாகமம் 33:4). ஏசா யாக்கோபின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, அவன் அவனுடன் நலமாக இருப்பதாக அவனுக்குத் தெரியப்படுத்தினான் (வச. 9-11).

நமக்கு எதிராக செய்த தவறுகளுக்காக யாராவது வருத்தம் காட்டினால், நமக்கு ஓர் தேர்வு உள்ளது: தயவு அல்லது பழிவாங்குதல். அவர்களை தயவுடன் அரவணைப்பது, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறது (ரோமர் 5:8) மற்றும் ஒப்புரவாகுதலின் பாதையாகவும் இருக்கிறது. 

 

கடந்த மற்றும் நிகழ்கால தேவன்

நாங்கள் எங்கள் குடும்பமாய் வளர்ந்த ஓரிகான் நகரத்தை விட்டுவந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நாங்கள் அங்கு சிறந்த நினைவுகளை உருவாக்கினோம். அந்த இடத்திற்கு திரும்பி மீண்டும் வந்தபோது, நான் மறந்துவிட்ட தருணங்களை அது எனக்கு நினைவூட்டியது. எங்கள் பெண்கள் கால்பந்து விளையாட்டுகள், எங்கள் பழைய வீடு, தேவாலயக் கூட்டங்கள் மற்றும் எங்கள் நண்பர்களின் மெக்சிகன் உணவகம் என்று பல நினைவுகள் எனக்கு ஏற்பட்டது. இப்போது நகரம் முழுவதுமாய் மாறிவிட்டது. ஆனால் அங்கு வருவது உகந்தது என்று என்னை நம்பவைக்க போதுமான நண்பர்கள் எனக்கு அங்கு இருந்தார்கள். 

இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபோது, உறவுகள், அடையாளங்கள் மற்றும் கலாச்சாரத்தின் பரிச்சயத்தை அவர்கள் தவறவிட நேரிட்டது. தேவனுக்கு விரோதமாக கலகம் செய்ததற்காக சிறையிருப்புக்கு சென்றதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள், அவர்களிடம் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று கூறியபோது (எரேமியா 28:2-4; 29:8-9), அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். சீக்கிரம் அவர்கள் சொந்த தேசத்திற்கு திரும்பிவிடுவார்கள் என்ற பொய்யான தீர்க்கதரிசனத்தைக் கேட்பது அவர்களுக்கு இலகுவாய் இருந்தது. 

வியாபாரிகளையும் அவர்களின் பொய்யான வாக்குறுதிகளையும் தேவன் அனுமதிக்கவில்லை. “உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்” (29:8) என்று தேவன் அவர்களை எச்சரிக்கிறார். அவர் தன்னுடைய ஜனத்தைக் குறித்து அழகான திட்டம் வைத்திருக்கிறார். அவைகள் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணும் மேன்மையான திட்டங்கள் (வச. 11). அவர்களின் நிலைமை சவாலானது, கடினமானது மற்றும் புதியது. ஆனால் தேவன் அவர்களுடன் இருந்தார். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (வச. 13) என்று அவர்களிடம் சொல்லுகிறார். “நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்” (வச. 14) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நம்முடைய பழைய மேன்மையான நினைவுகளை நினைக்கும்போது அது நம்மை சோர்வடையச் செய்துவிடுகிறது. தேவன் இப்போது என்ன செய்கிறார் என்பதைத் தவறவிடாதீர்கள். அவர் வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார்.

 

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம்.